புதன், 7 ஜூன், 2023

பதிவு - 4

     என் மகனுக்கு பிறந்தது முதலே இழுப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.  இழுப்பு நோய் வந்தவுடன் செய்வதறியாது இரவு பகல் பார்க்காமல் ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்வோம்.

    டாக்டர் அவனுக்கு ஊசி போட்ட பிறகுதான் அந்த இழுப்பு நிக்கும்.

    இழுப்பு நோய் குணமாவதற்கு டோப்போமாக், வால்பாரின் மருந்து மாத்திரைகளை டாக்டர் கொடுக்கச் சொன்னார். பிறகு ஜுரம் வந்தால் இழுப்பு வரும் அதனால் ப்ரிசியம் மாத்திரையை ஜுரம் வந்தவுடன் போடச் சொன்னார். 

    டாக்டர் சொன்ன மாத்திரைகளை தவறாமல் கொடுத்தும் கூட இழுப்பு நோய் குணமாகவில்லை. மாத்திரை கொடுத்தும் இழுப்பு வந்து கொண்டுதான் இருந்தது.  குறைந்தது ஒரு மணி நேரம் கூட இழுப்பு நீடிக்கும். 

    ஒரு நாள் மீண்டும் என் மகனுக்கு அதிகமாக இழுப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டி வந்தது.  அப்போது எங்கள் குடும்ப நண்பர் என் மகனை பார்க்க வந்தார்.  நாங்கள் மகனுக்காக படும் மன உளைச்சலைப் பார்த்து அக்குபங்சர் மருத்துவத்தை அறிமுகப்படுத்தினார். 

    அக்குபங்சர் ஒரு மருந்தில்லா மருத்துவம் என்றும், எல்லா நோய்களும் குணமாகும் என்பதைச் சொன்னார்.  இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சியாகவும், மருந்தில்லாமல் குணமாகிறது என்றவுடன் ஆச்சர்யமாகவும் இருந்தது.

என் மகனை அக்குஹீலரிடம் கூட்டிச் சென்று சிகிச்சை எடுத்தோம். அவர் நாடி பார்த்து, தொடுதல் மூலம் சிகிச்சை அளித்தார்.  எந்த மருந்து மாத்திரையும் எடுக்க வேண்டாம் சரியாகிவிடும் என்று சொன்னார். 

மருந்து மாத்திரை ஏதுமின்றி தொடு சிகிச்சை மூலம் எப்படி குணமாகும் என்று தோன்றியது.  சிகிச்சை எடுக்க எடுக்க அக்குபங்சர் சிகிச்சை மீது நம்பிக்கை ஏற்பட்டது. இப்போது என் மகன் அக்கு சிகிச்சையில் தான் இருக்கிறான்.

எப்போதாவது என் மகனுக்கு இழுப்பு நோய் வரும்.  அதுவும் ஒரு ஐந்தோ பத்து நிமிடம் வந்து போகும்.  அக்குபங்சர் சிகிச்சையால், முன்பைவிட இப்போது என் மகனிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 

இப்போது என் மகன் எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் இருக்கிறான்.  எங்களுக்கும் அக்கு சிகிச்சையில் புரிதல் ஏற்பட்டு நோயின் பயமில்லாமல், மன அமைதியுடன் வாழ்கிறோம்.

-       சிந்துமுருகன், குரோம்பேட்டை, சென்னை.

பதிவு - 3

             நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு மூக்கில் நீர் வடியும் தொந்தரவு இருந்தது. பைக்கில் சென்றாலோ அல்லது தூசி காற்றை சுவாசித்தாலோ மூக்கில் இருந்து நீர் வடியும். கண்களில் அரிப்பு ஏற்படும். பிறகு நானே மெடிக்கல் ஷாப்பில் ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிடுவேன். பிறகு இரண்டு நாட்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.

        சிறிது மாதம் கழித்து குளிர்ந்த காற்று வீசினாலோ அல்லது அதிக வெப்பத்தில் நின்றாலோ இதே தொந்தரவு மீண்டும் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போது இது டஸ்ட் அலர்ஜி என்று கூறினார்கள். சிறிது காலம் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டேன். பிறகு கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலைக்கு சென்றேன். வேலைக்கு சென்ற பொழுது பெரிய  அளவு தொந்தரவுகள் எதுவும் இல்லை.

                 பிறகு துபாய்க்கு வேலைக்கு சென்றேன். அங்கு சென்றதும் மீண்டும் இதே தொந்தரவு அதிகமானது. நட்சத்திர ஹோட்டலில் ரெஸ்டாரன்ட் மேனேஜராக வேலை செய்தேன். அதனால் மீண்டும் மருந்து மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கே மீண்டும் திரும்பி வரும் சூழல் உருவானது.

         இங்கு வந்தும் இதே தொந்தரவுகள் தொடர்ந்தன. அப்பொழுதுதான் அக்குபங்சர் மருத்துவத்தை உறவினர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். அன்று முதல் அக்குபங்சர் மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து ஆறு மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.அதன் பிறகு என்னுடைய தொந்தரவு முழுமையாக நீங்கியது.

                வாழ்வியல் முறையில் மாற்றங்கள், அக்குபங்சர் சிகிச்சை இவற்றின் மூலமாக  இன்று வரை எந்த மருந்து மாத்திரை இன்றி சுகமாக வாழ்கிறேன்.

                          நன்றி.

 

பதிவு எண்: 3

பி.எஸ்.முகம்மது அலி, கொடைக்கானல்.

பதிவு - 2

எனக்கு சிறு வயது முதலே அடிக்கடி தலை வலி வரும். எப்படியும் மாதம் ஒரு முறை கட்டாயமாக தலைவலி வந்துவிடும். பள்ளி நாட்களில் தலைவலி வரும்போது எல்லாம் அன்று விடுமுறை எடுத்து விடுவேன். தலைவலிக்காக பல  மருத்துவர்களிடம் சென்று காண்பித்தேன். நாளைக்கு 10 முதல் 12 மாத்திரைகள் வரை எனக்கு கொடுத்தனர். ஆனாலும் தலைவலி அவ்வப்போது வந்து கொண்டே தான் இருந்தது. இது எனக்கு பெரும் தொந்தரவாகவே இருந்தது. உடலில் அடிக்கடி பித்த நீர் சுரந்து கொண்டே இருக்கும். தலைவலி அதிகமாகி குமட்டலுடன் வாந்தியாக கசப்பு தன்மையுடன் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். பின்பு தலைவலி குறைய தொடங்கும் ‌. மறுபடியும் ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைவலி வரும்போது எல்லாம் மாத்திரைகளை போட்டு தலைவலியை அடக்கி கொள்வேன்.

               பின்பு எனக்கு அடுக்கு தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதிகாலையில் எழுந்தவுடன் 20 முதல் 30 தும்மல் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனை எனக்கு வெகு நாட்களாகவே இருந்து வந்தது. அப்போது அக்குபங்சர் மருத்துவம் பற்றி எனக்கு எந்த ஒரு புரிதலும் கிடையாது. என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அக்குபஞ்சர் மருத்துவம் பயின்று பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் என்னை பார்த்து  அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள். தொந்தரவுகள் சரியாகிவிடும் என்று கூறினார். சிகிச்சை எடுத்த ஒரு சில மாதங்களிலே எனக்கு தொந்தரவுகள் குறைந்தன.

             பின்பு நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு சிறுநீர் கழித்தவுடன் சிறுநீர் பாதை வழியாக சுமார் அரை டம்ளர் அளவுக்கு இரத்தம் வெளியாகும். இது ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போது வெளியானது . எனவே எனக்கு பயத்தை உண்டாக்கியது. நான் ஆங்கில மருத்துவரிடம் சென்று காண்பித்தேன். ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். ஸ்கேன் ரிப்போர்ட்டில் சுமார் 14  mm அளவிற்கு Prostate பகுதியில் பகுதியில் சிஸ்ட் இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் கூறினார். ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்து இரண்டு மூன்று ஆங்கில மருத்துவர்களிடம் காண்பித்தேன் அவர்களும் இதையே கூறினர். ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்து சித்த மருத்துவமனிடம் சென்று காண்பித்தேன். அவரும் சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து இல்லை எனவே ஆங்கில மருத்துவரிடம் சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். 

            பின்பு அக்குபங்சர் பயின்ற என்னுடைய சகோதரர்களிடம் இது  பற்றி கூறும் போது, அவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அதே இடத்தில் இது போன்ற வேறு ஒரு கட்டி உருவாகாது என்ற உத்தரவாதத்தை தர மாட்டார்கள். அப்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் கட்டி கேன்சர் கட்டியாக இருந்தால் என்ன செய்வது அது உடல் முழுக்க பரவிவிடும் என்று கூறினார். அப்போது அவர்களிடம் இதற்கு தீர்வு தான் என்ன என்று கேட்டேன். அக்குபங்சரில் முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள். கட்டி தானாக கரைந்து விடும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தனர். முழு நம்பிக்கையுடன் அக்குபங்சரில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். உணவிலும் அவர்கள் கூறியது போல் கட்டுப்பாட்டுடன் இருந்து கொண்டேன். சிகிச்சையில் சுமார் மூன்று மாதகால அளவில் கட்டி உடைந்து சிறுநீர் பாதை வழியாக வெளியேறுவதை என்னால் உணர முடிந்தது. அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று கூறிய மற்ற மருத்துவங்களை விட அறுவை சிகிச்சை இன்றி அக்குபங்சர் சிகிச்சை மூலம் என்னுடைய தொந்தரவு சரியானது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இன்று வரை இது தொடர்பான எந்த தொந்தரவுகளும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோய்க்கும் ஆங்கில மருத்துவ மட்டுமே தீர்வு என்ற எண்ணத்துடன் இருக்கும் என்னை போன்றவர்களின் மனநிலையை அக்குபங்சர் மருத்துவம் மாற்றி எல்லா நோய்களையும் அறுவை சிகிச்சை இன்றி மருந்து மாத்திரைகள் இன்றி குணப்படுத்த முடியும் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது. இந்த மருத்துவ முறை ஒவ்வொரு எளிய பாமர மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.  

-    சா.அகமது முகைதீன்சென்னை.

செவ்வாய், 6 ஜூன், 2023

பதிவு - 1

எனது சொந்த ஊர் திருச்சி. கடந்த 30 வருடங்களாக தொழில் நிமித்தமாக கரூரில் வசித்து வருகிறேன் 1968 ல் பிறந்த நான்... என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே, ஒரு பலவீனமான உடல்  நலத்தோடுதான் வாழ்ந்து வந்திருக்கிறேன். அடிக்கடி காய்ச்சல் இருமல் சளி போன்ற உடல் தொந்தரவுகளுக்கு ஆட்படுவதும்... ஆங்கில மருத்துவத்தை நாடி, மருந்துகள் மாத்திரை ஊசி என சரி செய்து கொள்வதும் என்றே எனது இளமை காலங்கள் நகர்ந்தது.

எனது திருமணத்திற்கு முன்னும் அதன் பின்னும் சுமார் 15 வருடங்கள் கரூரில் தனியாக இருந்ததால், ஹோட்டல் சாப்பாடு எனது உடல் நலத்தை இன்னும் கெடுத்தது . அதிகமான ரசாயன மருந்துகள் உட்கொண்டதால் புதிதாக தோல் நோயும் ஆட்கொண்டது.

மற்ற உடல் தொந்தரவுகள் போல் அல்லாமல் ... இது  தினசரி அரிப்பும் தடிப்பும் என வாடிக்கையானது. அரிப்பு என்றால் உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் கடுமையாக அரிக்கும். எப்படி சொரிகிறேனோ.. அந்த  டிசைனில் தடித்துக்கொள்ளும். அடுத்த நாளைக்குள் மறைந்து விடும். அதற்குள் பார்க்கும் 3ம் நபர்கள் பயந்து போய் விசாரிக்கும் அளவுக்கு தடிப்பு இருக்கும்.   இது முகம் உட்பட உடலின் எல்லா பாகங்களிலும் வெவ்வேறு சமயம் நடக்கும்.  எந்த மருந்துகளுக்கும் தீராமல் கட்டுப்பாட்டில் மட்டுமே வைக்க முடிந்தது.

ஆங்கில மருத்துவம் மட்டும் இன்றி மற்ற பல மருத்துவங்களான சித்தா ஆயுர்வேதம் யுனானி ஹோமியோபதி நாட்டு மருந்துகள் என்று அனைத்தையும் முயன்று பார்த்தும்.. தொடர்ச்சியாக மருந்துகள் எடுக்கும் போது குறைவதும், நிறுத்தினால் மீண்டும் வருவதுமாகவே இருந்தது. எதை சாப்பிட்டால் அலர்ஜி வருகிறது, ஏன் ஒத்துக்கொள்ளவில்லை... போன்ற சிந்தனைகள் தான் எனக்கு இருந்ததே தவிர இது நாம் எடுத்த அளவுக்கு அதிகமான மருந்துகளின் பின் விளைவு என்று புரியவே இல்லை.

இந்த நேரத்தில் எனது மனைவியின் கடுமையான முதுகு வலிக்காக அக்குபங்சர் சிகிச்சை எடுக்க மேட்டுப்பாளையம் ஹீலர் மகி ராமலிங்கம் அவர்களை சந்திக்க சென்றோம்.

அங்கு இருந்த கூட்ட மிகுதியால் சிகிச்சை எடுப்பவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். எனது மனைவியின் பிரச்சனையை விளக்கமாக சொல்வதற்காகவும், அவர்கள் கொடுக்கும் சிகிச்சையை காணும் ஆவலிலும், எனக்கும் முதுகு வலி என்று  டோக்கன் வாங்கிக்கொண்டு நானும் உள் நுழைந்தேன்.

எங்களது முறை வந்ததும்.. நான் எனது மனைவி உட்பட சுமார் 25 பேர் வரிசையாக அமர வைக்கப்பட்டோம். பிறகு மகி.ராமலிங்கம் அவர்கள் வரிசையாக நாடி பார்த்து... பார்த்தவுடன் சிகிச்சையும் அளித்துவிட்டு.. அடுத்தடுத்து நபர்களை பார்த்துக் கொண்டே நகர்ந்தார் யாரையும் எந்த கேள்வியும் கேட்க விடவில்லை. பேசவும் அனுமதிக்கவில்லை. எனது மனைவிக்கும் இதே கதி தான். எனக்கு சிகிச்சை கொடுக்க எனது கையை அவர் பிடித்தவுடன்..  அவரது கையை நான் பிடித்துக் கொண்டேன். எனது மனைவியை பற்றி, அவரது தொந்தரவுகளை பற்றி, இதுவரை எடுத்த ஸ்கேன் பரிசோதனை முடிவுகளை பற்றி எடுத்துக் கூறினேன். அவர் " ரிப்போர்ட்டெல்லாம் எடுத்து வந்திருக்கிறீர்களா " ,என்று ஆர்வமாக கேட்டார். நானும் "ஆமாம் ", என்றேன். " போகும்போது அந்த குப்பைத் தொட்டியில் அதை போட்டு விடுங்கள் உங்கள் மனைவிக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன். சரியாகிவிடும் நன்றாக இருந்தால் வர வேண்டாம். தொந்தரவு நீடித்தால் 15 நாள் கழித்து வாருங்கள் ", என்று கூறிவிட்டு எனக்கும் நாடி பார்த்து சிகிச்சை அளித்துவிட்டு அடுத்த நபருக்கு நகர்ந்து விட்டார்.

பல கிலோமீட்டர் பயணம் செய்து..‌. பல மணி நேரம் காத்திருந்து.‌‌..  இத்தகைய பதிலை கேட்டு ... அதிர்ச்சியும் கோபமும் இயலாமையும் என்று கலந்து கட்டியான உணர்ச்சிகளோடு அங்கிருந்து வெளியேறினோம்.

வீடு திரும்பும் பயணத்தின் போதே எனது மனைவி ஓரளவு வலியிலிருந்து மீளத் துவங்கினார். லேசாக நம்பிக்கை துளிர் விட ஊர் திரும்பினோம்.

" பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது " என்று ஒரு பழமொழி உண்டு. அடுத்த நாள் அந்த பழமொழியை நான் அடிக்கடி நினைக்க வேண்டியதாக இருந்தது.

காலையிலிருந்து தும்மல் துவங்கியது. அது சிறிது சிறிதாக தொடர் தும்மலாக மாறியது அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர முடியவில்லை. என்னிடமிருந்த கைகுட்டை நனைந்து ஒழுகியது. எங்களது வணிகத்திற்காக வாங்கி வைத்திருந்த.. புதிய துண்டுத்துணிகளால் ஆன வேஸ்ட் பாக்கெட்டை பிரித்து இரண்டு மூன்று துணியை பயன்படுத்தியாகி விட்டது. தொடர் தும்மலால் மார்பு, விலா பகுதிகள் வலிக்கத் துவங்கி விட்டது. பொறுத்து, பொறுத்து பார்த்து முடியாமல் ‌‌.. பகல் 12 மணி போல் மேட்டுப்பாளையம் மகிராமலிங்கம் சார் சிகிச்சை மையத்திற்கு தொடர்பு கொண்டேன். அவர்கள் இரவு 9 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளுங்கள் அப்போதுதான் சார் பேசுவார் என்று கூறி விட்டார்கள். ஆனால் நான் எனது மோசமான நிலையை சொல்லி அரற்றியதால் இரண்டு மணிக்கு தொடர்பு கொண்டு பேச சொன்னார்கள்.

மீண்டும் பேசியபோது மகிராமலிங்கம் சார் லைனில் வந்தார். முதுகு வலிக்காக முதல் நாள் சிகிச்சை எடுத்ததையும் இன்றைய என்னுடைய உடல் தொந்தரவையும் எடுத்துச் சொன்னேன்.

அதற்கு அவர், " மகிழ்ச்சி, உடல் சிறப்பாக வேலை செய்கிறது", என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த நான்.. " இப்படி தும்மல் வந்தால், சிட்ரிஸன் என்ற மாத்திரையை பயன்படுத்துவேன். பயன்படுத்தட்டுமா.." என்று கேட்டேன்.

அவர், " மாத்திரையை சாப்பிட்டீர்களா..." என்று கேட்டார். நான் இல்லை என்றதும், " இது போன்ற மாத்திரைகளை, இன்று மட்டுமல்ல.. இனி எப்போதுமே.. எதற்காகவும்.. பயன்படுத்தாதீர்கள். தும்மல் சரியாகும் வரை எதுவும் சாப்பிடாதீர்கள். ஓய்வில் இருங்கள் ", என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டார்.

நானும் சாப்பிடும் நிலையில் இல்லை .அன்று முழுதும் ஓய்வில் இருந்தேன் அடுத்த நாள் தும்மல் படிப்படியாக குறைந்து நின்று விட்டது. அது மட்டுமல்லாமல் என்னுடைய தொடர் தோல் அரிப்பும், தடிப்பும் அதன் பிறகு வரவே இல்லை. எந்த உணவுகளை எல்லாம் நான் இதற்காக தவிர்த்து வந்தேனோ... அவற்றையெல்லாம் சாப்பிட்டும், எனக்கு அந்த அரிப்புகள் வராமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

நம்முடைய உடல் தொந்தரவு குறித்து எதுவுமே கேட்காமல்,(வேறு நோயை மாற்றிப் சொல்லியும்...) நாடி பார்த்து, ஒரே ஒரு இடத்தில் தொடுவதன் மூலம் ... பல காலமாக நீடித்து இருந்த ஒரு நோயை... தொந்தரவை நீக்கிவிட முடியும், என்பதை உணர்வு பூர்வமாக சொந்த அனுபவமாக உணர்ந்தேன்.

நான் அறிந்த வகையில் அக்குபங்சர் சிகிச்சை என்பது உடல் முழுவதும் பல இடங்களில் ஊசிகளை குத்தியும் சில நேரங்களில் அதில் லேசான மின் அதிர்வை தந்தும் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் இங்கு ஒரே ஒரு இடத்தில் ஊசி கூட அல்லாமல் விரல் நுனியினால் தொடுவதன் மூலமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது‌ . அது மிகச்சிறந்த பலனும் அளித்தது என்பது எனக்கு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஒருங்கே தூண்டி இது குறித்தான தேடுதலை துவக்கி வைத்தது.

நன்றி..

சி.பேரின்பராஜன், கரூர்

பதிவு - 4

       என் மகனுக்கு பிறந்தது முதலே இழுப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.   இழுப்பு நோய் வந்தவுடன் செய்வதறியாது இரவு பகல் பார்க்காமல் ...